திருமங்கலம்: திருமங்கலம் அருகே தகாத உறவை தொடர்ந்த அக்கா, அவரது காதலனை கழுத்தறுத்து படுகொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கொம்பாடி, ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் நந்திகுமார். இவரது மகன்கள் சிவா, சதீஷ்குமார், முத்துக்குமார். 2வது மகன் சதீஷ்குமார் (28), கம்பி கட்டும் தொழிலாளி. இதே ஊரை சேர்ந்தவர் அழகுமலை. இவருக்கு 3 மகள்கள் மற்றும் பிரவீன்குமார் (20) என்ற மகன் உள்ளனர். அழகுமலையின் மூன்றாவது மகளான மகாலட்சுமி (24), சதீஷ்குமார் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், மகாலட்சுமிக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு வளையங்குளத்தினை சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் மகாலட்சுமி கணவருடன் வாழ பிடிக்காமல் பெற்றோர் வீடான கொம்பாடிக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து மீண்டும் சதீஷ்குமார், மகாலட்சுமி காதலை தொடர்ந்துள்ளனர். அடிக்கடி இருவரும் போனில் பேசி வந்துள்ளனர். இந்த விபரம் மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமாருக்கு தெரிய வரவே, இருவரையும் கண்டித்துள்ளார். தொடர்ந்து பேசினால் இருவரையும் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் வீட்டிலும் கூறியுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மதுரையில் கம்பி கட்டும் வேலைக்கு சென்றுவிட்டு சதீஷ்குமார் கொம்பாடி பஸ் ஸ்டாப்பில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பிரவீன்குமார், திடீரென சதீஸ்குமாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி கழுத்தை அரிவாளால் வெட்டினார். அண்ணனை அழைத்துச் செல்ல வந்த முத்துக்குமார் அப்பகுதியில் ஏற்பட்ட அலறல் சத்தத்தை கேட்டு ஓடிவந்து பார்த்துள்ளார்.
அப்போது அண்ணனின் துண்டான தலையை எடுத்து கொண்டு பிரவீன்குமார் கிளம்பினார். அப்போது, முத்துக்குமார் அவரை பிடிக்க முயலவே, ‘பக்கத்தில் வந்தால் உன்னையும் கொன்று விடுவேன்’ என அரிவாளை காட்டி மிரட்டி விட்டு, கிராம நாடக மேடையில் சதீஷ்குமாரின் தலையை வைத்துவிட்டு, தனது வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு தூங்கிக் கொண்டிருந்த அக்கா மகாலட்சுமியின் கழுத்தையும், பிரவீன்குமார் அறுத்து கொலை செய்துவிட்டு, பிரவீன்குமார் தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடக்கோவில் போலீசார் கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார், மகாலட்சுமி உடல்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நாடகமேடையில் வைக்கப்பட்டிருந்த சதீஷ்குமாரின் தலையையும் கைப்பற்றினர். மேலும், கை துண்டிக்கப்பட்ட செல்வி (எ) சின்னபிடாரியையும் மீட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று மதுரையில் பதுங்கி இருந்த பிரவீன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரட்டை கொலை, திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* தாய் கை துண்டானது
தனது அக்காவை பிரவீன்குமார் கழுத்தறுத்து கொன்றபோது, அவரை தாய் செல்வி (எ) சின்னபிடாரியின் தடுத்து உள்ளார். அப்போது தாய் என்று கூட பராமல் அவரது வலது கையில் வெட்டினார். இதில் அவர் கை துண்டானது.