பல்லாவரம்: பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் மற்றும் குன்றத்துார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னையில் உள்ள பிராட்வே, சென்ட்ரல், எழும்பூர், மெரினா கடற்கரை, தி.நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல மின்சார ரயில் போக்குவரத்தையே பெரிதும் நம்பியுள்ளனர். இதனால் பல்லாவரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தினசரி ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இந்த ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே ஸ்டேஷன் சாலையில் சமீப காலமாக அதிகளவில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு, மலைபோல் குவிந்து காணப்படுகிறது. அவற்றை அப்பகுதியில் சுற்றித்திரியும் மாடு, நாய் உள்ளிட்டவை கிளறுவதால், சாலையெங்கும் குப்பை சிதறி, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் ரயில் பயணிகள் மற்றும் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது. மேலும் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், இந்த பகுதியில் உள்ள குப்பை குவியலை அகற்றவும், இந்த பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.