Wednesday, May 22, 2024
Home » பல்லடம் அருகே நிருபரை கொல்ல முயன்ற வழக்கு கூலிப்படை தலைவன் சிக்கினான்: போலீசார் தீவிர விசாரணை

பல்லடம் அருகே நிருபரை கொல்ல முயன்ற வழக்கு கூலிப்படை தலைவன் சிக்கினான்: போலீசார் தீவிர விசாரணை

by Arun Kumar

திருப்பூர்: பல்லடம் அருகே செய்தியாளர் கொலை முயற்சி வழக்கில் கூலிப்படை தலைவனாக செயல்பட்ட ஒருவனை பிடித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேசபிரபு (29). இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரவு பல்லடம்- பொள்ளாச்சி சாலையில் உள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் நேசபிரபுவை மர்ம நபர்கள் துரத்தி சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர்.

இதில் பலத்த காயமடைந்த நேசபிரபு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். முன்விரோதத்தில் நேசபிரபு வெட்டப்பட்டது தெரியவந்தது. இதில் தொடர்புடைய ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரவீன் (27), திருப்பூர் கேவிஆர் நகரை சேர்ந்த சரவணன் (23) ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை பிடிக்க மேலும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு மாவட்டங்களில் முகாமிட்டு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் கூலிப்படை தலைவனாக செயல்பட்ட ஒருவனை திருப்பூரில் நேற்று தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் பல்வேறு தகவல்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

17 − 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi