புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் தூதரகங்களுக்கு இடையே கடந்த 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி இருநாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள கைதிகள், மீனவர்கள் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1, ஜூலை 1 ஆகிய நாட்களில் இந்த தகவல் பரிமாற்றம் செய்யப்படும். அதன்படி 266 மீனவர்கள், 42 பொதுமக்கள் உள்பட 308 இந்தியர்கள் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளதாக பாகிஸ்தான் நேற்று தெரிவித்தது.
இதேபோல் இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்கள் என நம்பப்படும் 343 பொதுமக்கள், 74 மீனவர்கள் உள்பட 417 பேர் பட்டியலை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது. அந்த வகையில் தண்டனை காலம் முடிவுற்று பாகிஸ்தான் சிறையில் உள்ள 254 இந்திய மீனவர்கள், 4 பொதுமக்களையும் விரைவாக விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பும்படி ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.