நெல்லை: குற்றாலநாதர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான நூற்றாண்டு பழமைவாய்ந்த பாத்திரங்களை குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் அபகரித்து சென்றதாக அறநிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதர்சுவாமி கோவிலில் விழா பூஜை கட்டளை செய்யும் முறையை 500 ஆண்டுகளுக்கு முன்பு சொக்கம்பட்டி ஜெமின் நிர்வகித்து வந்தது.
பிறகு மாவட்ட நிர்வாக வாரியத்திடம் இருந்த கட்டளை நிர்வாகம் தற்போது பேரூராட்சி நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்றம் கட்டளை நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்திடம் ஒப்படைக்குமாறு சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில் கோயில் உதவி ஆணையர் நெல்லை சிலை தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதில் அவர் குற்றாலநாதர்சாமி கோவிலுக்கு சொந்தமான செம்பு, பித்தளை மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட 500 ஆண்டுகால பழமையான பாத்திரங்களை கல்மண்டபத்திலிருந்து ஒரு டிராக்டரில் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் எடுத்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். கோவிலுக்கு சொந்தமான மதிப்புமிக்க அந்த பாத்திரங்களை மீட்டு தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.