மதுரை வர்த்தக மையத்தில், அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறும்போது: மாநிலங்களின் உரிமையை மாநில கட்சிகளால்தான் மீட்டெடுக்க முடியும். இதனால்தான் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதால், எவ்வித பலனும் அளிக்கப்போவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே தெரிவித்துள்ளார். 2001ம் ஆண்டு முதல் தற்போது வரை, பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் தமிழகம் பாதிக்கப்பட்டபோதெல்லாம், நிவாரண தொகையாக இதுவரை ரூ.1.50 லட்சம் கோடி வரை கேட்டுள்ளோம். ஆனால், தற்போது வரை, ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
எந்த கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தாலும், அது தமிழகத்தின் நலனுக்கு பலனளிக்கப் போவதில்லை. ‘என் தங்கச்சியை நாய் கடித்து விட்டது’ என ஜனகராஜ் பேசும் காமெடி போல இருக்கிறது ஓபிஎஸ் பேசுவது. ஓபிஎஸ் ஜனகராஜ் போல ஆகிவிட்டார். தமிழகத்தின் நலனை மனதில் வைத்து, தேர்தல் அறிக்கையை தயார் செய்து வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார். ஓ.பன்னீர்செல்வம், ‘‘கடந்த நான்கரை ஆண்டுகள் பாஜவின் தயவில்தான் அதிமுக ஆட்சி நடந்தது. இன்று கூட்டணி இல்லை என்று சொல்லி அவர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் இழைத்துள்ளார். அதிமுகவை ஐந்தாக உடைத்திருக்கிறார். எடப்பாடி இல்லாத அதிமுக உருவாகும். பதவி இல்லாததால் ஜெயக்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் உளறுகிறார்’’ எனத்தெரிவித்திருந்த நிலையில் ஜெயக்குமார் தற்போது பேசியிருப்பது பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.