அதிமுகவில் ெஜயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். கட்சியில் பொருளாளர் பதவி வகித்தார். ஜெயலலிதா இருந்த போது 2 முறை, அவர் மறைந்த பிறகு ஒரு முறை என 3 முறை தற்காலிக முதல்வராக இருந்தார். இப்படி அதிமுகவில் கம்பீரமாக வலம் வந்த ஓபிஎஸ்சின் நிலை, இப்போது பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ், நீதிமன்றங்களை நாடினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு சாதகமாகவே தீர்ப்புகள் வந்தன. இதனிடையே பாஜவுடன் கூட்டணி சேர்ந்தார். ராமநாதபுரம் தொகுதியை மட்டும் பாஜ ஒதுக்கியது. இதனால் அங்கு ஓபிஎஸ்சே களமிறங்கி உள்ளார்.
இதனிடையே இரட்டை இலை சின்னம் கேட்ட ஓபிஎஸ்சின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
இரட்டை இலையை முடக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எடுபடவில்லை. அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் இப்போது ஓபிஎஸ் அதிமுகவின் அடையாளமே இல்லாமல் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பாஜ தலைமை தனக்கு கைகொடுக்கும் என ஓபிஎஸ் நம்பினார். இதனால் தான் அந்த கட்சியை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்தார். ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கிய போதும், கடைசி நேரத்திலாவது பாஜ உதவும் என இருந்தார். ஆனால் பாஜ எந்த உதவியும் செய்யவில்லை. கட்சியும் கைவிட்டு போய் விட்டது. பாஜவும் கைவிட்டு விட்டது. இப்போது ஓபிஎஸ் நட்டாற்றில் நின்று தவிக்கிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.