கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் அண்ணாமலை, நேற்று முன்தினம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர், கோவை பெரியகடை வீதியில் உள்ள கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் இருந்தனர். கோனியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அண்ணாமலையை, வயதான மூதாட்டி ஒருவர் வரவேற்று சால்வை அணிவித்தார்.
பின்னர், மாலை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். இந்த மூதாட்டி, கோவையில் கடந்த 1988ம் ஆண்டு நடந்த மத மோதலில் படுகொலை செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி நிர்வாகி கெம்பட்டி காலனி வீரகணேஷின் தாயார் ஆவார். இவரை, அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அண்ணாமலை முன்னிலையில், அந்த மூதாட்டிக்கு ரூ.500 அன்பளிப்பு கொடுக்க முயன்றார். ஆனால், அந்த மூதாட்டி வாங்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.