நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கன்னியாகுமரியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று கூறுகிறார். ரூ.6200 கோடி தேர்தல் பத்திரத்தில் கொடுத்த பணம் எல்லாம் இருக்கிறதே?. அவர்களுக்கு தேர்தலுக்கு பணம் கொடுக்கவா ஆள் இல்லை. எங்களுக்கு ஆள் இல்லை. அவர்களுக்கு இரண்டு பெரிய முதலாளிகள், இடது கை, வலது கையாக உள்ளனர்.
அம்பானியின் ஒரு மகனின் திருமணத்திற்காக ஒரு உள்நாட்டு விண்ணூர்தி நிலையத்தை பன்னாட்டு முனையமாக மாற்றி 10 நாட்களுக்கு அவரிடம் கொடுக்கிறீர்கள், அந்த அளவுக்கு அவர்களிடம் வேலை செய்கிறீர்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாடாளுமன்றம் சென்றால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் குரல் எழுப்புவார்கள். நாங்கள் நிறைய கேள்விகள் வைத்துள்ளோம். இது மக்கள் ஆட்சிதானே, மக்கள் ஆட்சியின் தலைவர் யார், குடியரசு தலைவர். அவர் மக்களால் தேர்வு செய்யப்பட முடியாது, தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்வார்கள். அந்த அமைப்பு ஜனநாயக துரோகம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.