சென்னை: பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் இருந்து 10,124 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை மற்றும் 18ம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என 2 நாட்களுக்கும் சேர்த்து 7,154 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து அந்த 2 நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வரும் 18ம் தேதி சென்னையிலிருந்து புறப்படவுள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு பெரும்பான்மையான தடங்களில் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் சென்னையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில் முன்பதிவில் காலியாக உள்ள இருக்கைகளின் விபரம் தெரிவிக்கப்படுகிறது. எனவே வரும் 18ம் தேதி கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு இன்று மற்றும் நாளை தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.