நீலகிரி: உதகையில் 132ம் ஆண்டு தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி விமர்சியாக தொடங்கியுள்ளது. கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக உதகையில் தென்னிந்திய கெனல் கிளப் சார்பாக ஆண்டுதோறும் நாய்கள் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் 132வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது. ஊட்டி அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில் 56 வகையான 470 நாய்கள் பங்கேற்றிருந்தன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், மராட்டியம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நாய்கள் அழைத்து வரப்பட்டுள்ளன. முதல் நாளில் நாய்களின் உடல் அழகு, கீழ்ப்படிதல், பராமரிப்பு, கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சிறப்பாக செயல்பட்ட நாய்களுக்கு பரிசு கோப்பைகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த கண்காட்சியில் முதன்முறையாக கலந்துக்கொண்ட டாஸ் பூட்டான், மினியேச்சர் பூட்டான், நியூ ஹோம் லான் உள்ளிட்ட புதிய வகை நாய்களை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.