*நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ரிஷிவந்தியம் : வடமாமந்தூர்- இளையனார்குப்பம் செல்லும் சாலை ஆக்கிரமிப்பால் தெடர்ந்து விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வடமாமந்தூர் – இளையனார்குப்பம் செல்லும் கிராம சாலை உள்ளது. இந்த கிராம சாலை வழியாக சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் சென்று வருகின்றனர். மேலும் விவசாயிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைக்காக மூங்கில்துறைப்பட்டு, திருவண்ணாமலைக்கும், அதேபோல் சங்கராபுரம், திருக்கோவிலூர், விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வடமாமந்தூர் – இளையனார்குப்பம் செல்லும் கிராம சாலையில் உள்ள அய்யனாரப்பன் கோயில் அருகே சாலையை ஆக்கிரமித்து நிலமாக சமன்படுத்தியதால் அவ்வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் மற்றும் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் அவ்வப்போது பள்ளத்தில் இறங்கி விபத்துக்கள் நேரிடுகின்றன. இதனால் அந்த பகுதி பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே வடமாமந்தூர் – இளையனார்குப்பம் செல்லும் கிராம சாலையில் சாலையை ஒட்டி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்து இல்லாமல் பேருந்துகள் மற்றும் கரும்பு வாகனங்கள் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.