சென்னை: ஒரேநாடு ஒரேதேர்தல் என்று சொல்வது, கடைசியில் நாட்டிற்கு ஒரே தலைவர் என்பதில் போய் முடியும் என்று பிரதமர் மோடியை ப.சிதம்பரம் கடுமையாக தாக்கி பேசினார். சென்னை கிழக்கு மாவட்டம், வில்லிவாக்கம் தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் அயனாவரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ப.சிதம்பரம், சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, வில்லிவாக்கம் எம்எல்ஏ வெற்றிஅழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசியதாவது: எந்த துறையாக இருந்தாலும் முதல் வரிசையில் கலைஞர் இருப்பார். அத்தகைய மாமனிதருடைய நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப் போகிறோம். அரசியல் சாசனத்தைப் படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள். ஒன்றிய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. சளைத்த அரசும் அல்ல.
குறிப்பாக பாஜ கட்சி ஆளாத மாநிலங்களோடு அவர்கள் மோதிக்கொண்டே இருந்தால் அந்த மாநிலத்தின் திட்டங்களை எப்படி நிறைவேற்ற முடியும். உரிமைகள் மறுக்கப்படுகின்றன. நரேந்திர மோடி பிரதமரான பிறகு கடந்த 9 ஆண்டுகளாக தென் மாநிலங்கள் அதிகமாக வஞ்சிக்கப்படுகின்றன. மாநிலங்களை அவர் மதிப்பது கிடையாது. மாநில உரிமைகளையும் மதிப்பது கிடையாது. ஒரேநாடு ஒரேமொழி என அவர்கள் சொல்வது, கடைசியில் ஒரேகட்சி ஒரேதலைவர் நரேந்திர மோடி என்பதில் போய் முடியும். இன்னும் 300 நாட்களில் தேர்தல் வரும். அதற்குப் பிறகும் இந்த நிலைமை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.