பாலக்காடு: ஓணம் திருவிழாவை முன்னிட்டு கேரள -தமிழக எல்லை சோதனைச்சாவடிகளில் உணவு தானிய வழங்கல் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வாளையார், மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைக்கட்டி, நடுப்புணி, வேலந்தாவளம், செம்ணாம்பதி, ஒழலப்பதி ஆகிய இடங்களில் சோதனைச்சாவடிகள் உள்ளன. இங்கு தமிழகத்திலிருந்து வரும் வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தி வருகிறார்கள்.
குறிப்பாக பால் ஏற்றி வரும் டேங்கர் வாகனங்களில் பாலின் தரம்? சரியாக உள்ளதா? என அதிகாரிகள் தீவிரமாக பரிசோதனை நடத்தி வருகின்றனர். ஓணம் திருவிழாவிற்காக பால் அதிகளவில் தேவைப்படுகிறது, இதனால் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலமாக பால் கேரளாவிற்கு வந்தவாறு உள்ளது. இது தவிர பால், சமையல் எண்ணைள், பப்படம், பாயசம் மிக்ஸ், சர்க்கரை, நெய், காய்கறிகள், பழவகைகள் ஆகியவற்றின் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்த பின்பு அனுமதிக்கப்படுக்கின்றன. இது தவிர அதிகாரிகள் கடைகளிலும் சோதனை செய்து வருகின்றனர். அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பதுக்கல் உள்ளனவா? என்பது குறித்தும் கண்காணித்து வருகிறார்கள்.