*நேந்திரம் வாழைத்தார் செலுத்தி நேர்த்திக்கடன்
பாலக்காடு : ஓணம் திருவிழாவையொட்டி குருவாயூர் கோயில் முன்பு மெகா கிருஷ்ணர் உருவ அத்தப்பூக்கோலம் பக்தர்களை பரவசப்படுத்தியது. நேந்திரம் வாழைத்தார் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் ஓணம் திருவிழாவின் முதல் நாளான உத்தராடம் நட்சத்திர நாளில் பக்தர்கள் நேந்திரம் வாழைத்தார்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
குருவாயூர் கோயில் நடை நேற்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு விஷேச பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 7 மணிக்கு கோவில் வளாகத்தில் யானைகள் மீது உற்சவர் எழுந்தருளினார். இதனையடுத்து கிழக்கு கோபுர வாயில் முன்பாக தங்க கொடிமரத்தின் கீழ் மாக்கோலத்தில் வாழை இலைகள் அமைத்து கணபதி பூஜைக்குப்பின் உத்திராடம் நாளில் கோயில் மேல்சாந்தி பிரம்மஸ் தோட்டம் சிவகரன் நம்பூதிரி நேந்திரம் வாழைத்தார் மூலவருக்கு வழிபாடு செலுத்தினார்.
கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் வரிசையாக நின்று வாழைத்தார் சமர்ப்பணம் நடைபெற்றது. உத்தராடம் நாளில் நேந்திர வாழைத்தார் வழிபாடுகள் செலுத்துவதற்காக ஒன்றிய அமைச்சர் வி.முரளிதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் மேல்சாந்தி பிரம்ம தோட்டம் சிவகரன் நம்பூதிரி, மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாட், தேவசம் சேர்மன் டாக்டர். வி.கே.விஜயன், தேவஸ்தான நிர்வாக உறுப்பினர்களான மனோஜ், செங்கரா சுரேந்திரன், கோபிநாத், ரவீந்தரன், நிர்வாகி கே.பி. விநயன் ஆகியோர் மூலவருக்கு நேந்திரம் வாழைத்தார் வழிபாடு செலுத்தினர்.
நீண்ட வரிசையாக நின்ற பக்தர்கள் வாழைத்தார்கள் வழிபாடுகள் செலுத்தி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பூஜைகள் முடியும் வரையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நேந்திர வாழைத்தார்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஓணம் திருவிழாவையொட்டி அரசு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.