சென்னை: ஒடிசா ரயில் விபத்தில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என, தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டை உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து குறித்து, நேரில் ஆய்வு மேற்கொள்ள சென்றிருந்த தமிழ்நாடு அமைச்சர்கள் குழு நேற்று முன்தினம் சென்னை வந்து முதல்வரை சந்தித்து, இச்சம்பவம் குறித்து விளக்கினார்கள். அதன் தொடர்ச்சியாக அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு பயணிகள் விமானத்தில், சென்னை திரும்பியது. சென்னை விமான நிலையத்தில் பணீந்திர ரெட்டி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ‘‘கோரமண்டல் ரயிலில் 127 பேர் முன்பதிவு செய்து, சென்னைக்கு பயணம் செய்ய இருந்தனர். அதில் 17 பேர் ரயிலில் பயணம் செய்யவில்லை. மேலும் 6 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களுடன் பயணித்தவர்கள் அவர்கள் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். 382 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தமிழர்கள் பத்திரமாக இருக்கிறார்கள் என்றார்.