புபனேஷ்வர் : ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ், ஷாலிமார் – சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 288க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் 900 பேர் காயம் அடைந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளனர். 55 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் ஒடிசாவின் பாலசூர், ஜட்ஜ்பூர் உள்பட 3 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படுகாயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 55 பேர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது.இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் லேசான காயம் அடைந்த 250 பயணிகள், முதலுதவி சிகிச்சைக்கு பிறகு காலை 8.45க்கு புவனேஷ்வர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் திரும்புகின்றனர். ஒடிசா பத்ரக்கிலிருந்து புறப்பட்ட ரயில் நாளை காலை 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் மூலம் 133 பேர் சென்னைக்கு வருகின்றனர். இதனிடையே சென்னையில் இருந்து உறவினர்கள் புவனேஸ்வருக்கு செல்லும் சிறப்பு ரயில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு புவனேஷ்வர் வரை இயக்கப்படுகிறது.