புபனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் மற்றொரு சரக்கு ரயிலும் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் பாலசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி இரவு 7 மணி அளவில் ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் மாறி நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.அந்த சமயத்தில் அருகே மற்றொரு தண்டவாளத்தில் வந்த பெங்களூர் ஹவுரா சூப்பர்பாஸ்ட் ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரசின் பெட்டிகள் மோதியதில் அந்த ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.இந்த விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 1100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தின் சோக சுவடுகள் மறைவதற்குள் ஒடிசாவின் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டுங்குரி சுரங்கத்திலிருந்து பர்கர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சம்பர்தாரா பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.விபத்து நடந்ததைத் தொடர்ந்து உடனடியாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மீட்பு பணிகளை தொடர்ந்து, தண்டவாள சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.