Monday, May 6, 2024
Home » சேலத்தில் கொலையானவர் அடையாளம் தெரிந்தது தொழிலாளியை கொன்றவர் ஏற்கனவே நண்பரை கொலை செய்தது அம்பலம்

சேலத்தில் கொலையானவர் அடையாளம் தெரிந்தது தொழிலாளியை கொன்றவர் ஏற்கனவே நண்பரை கொலை செய்தது அம்பலம்

by Lakshmipathi

*போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சேலம் : சேலத்தில் கொலையானவர் அடையாளம் தெரிந்த நிலையில், அவரை கொலை செய்தவர் ஏற்கனவே இன்னொரு கொலை வழக்கில் கைதானவர் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.சேலம் மாநகராட்சி நுழைவு வாயில் அருகில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக கொலை செய்தவரை பிடித்து தாக்கினர்.

இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் பிடித்து கொடுத்தவர் பெயர் பிரபாகரன்(54). நெத்திமேடு முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர். பொதுமக்கள் தாக்கியதில் இவருக்கு காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்தார். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து டவுன் போலீசார், அவரது புகைப்படத்தை வைத்து விசாரணை நடத்தினர். இதில் கொலையானவர் தாதகாப்பட்டி கேட் பகுதியை சேர்ந்த பரமசிவம்(40) என்பதும் கூலித்தொழிலாளி எனவும் தெரியவந்தது. திருமணம் செய்து கொள்ளவில்லை.

அவரது பெற்றோர் இறந்து விட்டனர். பத்மா என்ற அக்கா மட்டும் இருக்கிறார். பரமசிவம் கூலிவேலைக்கு செல்வார். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு மதுகுடித்து விட்டு, ஆங்காங்கே படுத்துக்கொள்வார். கலெக்டர் அலுவலகம் அருகில், ஆதரவற்றோருக்கு பொதுமக்கள் காலை உணவு கொடுப்பார்கள். அதனை வாங்கி தின்று விட்டு, அங்கேயே இருப்பது தெரியவந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், கொலையான பரமசிவமும், கொலை செய்த பிரபாகரனும் ஒன்றாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பிரபாகரன் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால், போலீசாரால் விசாரணை நடத்த முடியவில்லை. போதை தெளிந்தபிறகு நேற்று காலை அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிரபாகரன் பற்றிய திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவர் கடந்த 2021ம் ஆண்டு நண்பர் ஒருவரை கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. பிரபாகரனுக்கு சொந்த வீடு இருக்கிறது. தினமும் குடித்து விட்டு வந்து தகராறு செய்ததால், 5 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, நண்பரான பிரபாகரன் என்பவருடன், பிரபாகரன் வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தனர்.

போதை தலைக்கேறிய நிலையில், நண்பரை கொடூரமாக தாக்கினார். மேலும் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், பிரபாகரனை பிடித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நண்பரை கொன்றது போல், மதுபோதையில் பரமசிவத்தையும் அவர் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பிரபாகரனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி?

சேலம் அரசு மருத்துவமனை பகுதியில் ஏராளமான முதியோர் யாசகம் பெற்று வருகின்றனர். அவர்களை சிகிச்சைக்காக அழைத்து வரும் உறவினர்கள், அவர்களை அங்கேயே விட்டு விட்டு, சென்று விடுகின்றனர். இதனால் யாரும் இல்லாத அனாதைகளாக, அவர்கள் யாசகம் பெற்று அங்கேயே கிடக்கிறார்கள். சிலர் யாசகம் பெறுவதற்காகவே, முதியோரை இறக்கி விட்டு விட்டு சென்று, மாலையில் வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.

ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு, பொதுமக்கள் காலை உணவு வழங்கி வருகின்றனர். அதில் தான் கொலையான பரமசிவமும், கொலையாளியான பிரபாகரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

You may also like

Leave a Comment

14 − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi