கோடை காலம் வந்துவிட்டாலே எங்கும் மாம்பழங்கள்தான் கண்களில் படும். அல்போன்சா மாம்பழம் இந்தியாவில் மிகவும் பிரபலமான மாம்பழங்களில் ஒன்று. 15-ஆம் நூற்றாண்டில் கேரளாவை கைப்பற்றிய போர்ச்சுகிஸ் ஜெனரல் அல்போன்சோடி அல் புகார்சியம் நினைவாக அந்த மாம்பழத்துக்கு பெயரிடப்பட்டது. அல்போன்சாவின் சதைப்பகுதி மென்மையாகவும், கூழ் போலவும், செழுமையான இனிய சுவையுடன் இருக்கும் மெல்லிய தோலைக் கொண்டது.
பச்சை நிறத்தில் இருந்தும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் அதன் சதை சற்று நார்ச் சத்து அமைப்புடன் மென்மையாக இருக்கும். இதே போல இமாம்பசந்த் மாம்பழங்கள் மஞ்சள் தோல் மற்றும் ஆரஞ்சு சிவப்பு சதையுடன் அதிக இனிப்புகளை கொண்டவை. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மாதா ஊட்டாத சோறும் மாம்பழம் ஊட்டும் என்பார்கள். அதாவது அன்னை ஊட்டி உன்னாத சாப்பாட்டைக் கூட ஊட்டச்சத்துடன் மாம்பழம் ஊட்டி விடும். அந்த அளவுக்கு மாம் பழத்தில் நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து மற்றும் கொழுப்புச் சத்தும், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் என நிறைய தாது சத்துக்களும் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22ம் தேதி மாம்பழ தினமாக கொண்டாடப்படுகிறது.
மாம்பழங்களை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:
தேங்காயை தட்டிப் பார்த்து வாங்குவது போல, மாம்பழங்களை தட்டிப்பார்த்து தான் வாங்க வேண்டும். தட்டும் போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம். வாங்கும் போது நிச்சயமாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் பழத்தில் இருக்கும் கறுப்பு நிறப்புள்ளிகள். இவை இல்லாத பழங்கள் ஆபத்தானவை. செயற்கை முறையில் கனிய வைக்கப்பட்டவை. கறுப்பு புள்ளிகள் உள்ள பழங்களில் தான் சுவை அதிகமாக இருக்கும்.
மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிற சதையுள்ள பழமென்றால் அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம். வேதிக் கற்கள், வேதிப் பொருட்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்கவைக்கப்படும் மாம்பழங்கள் செரிமான கோளாறுகள், அரிப்பு, வாந்தி பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்னைகள் என பல பாதிப்புகள் உண்டாக்கும் என்பதால் பாம்பழம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மாம்பழத்தில் இருந்து வெளி வரும் வாசனையை வைத்து மாம்பழங்களை தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல் பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. – நிற கோடுகள் திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களை தாராளமாக வாங்கலாம்.
சீசனின் இல்லாத போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்க வைக்கப்படுகின்றன. அதாவது வெள்ளை நிறத்தில் இருக்கும் கால்சியம் கார்பைடு கற்களை இதற்கு பயன்படுத்துகிறார்கள். அத்துடன், இந்த கற்களைப் பொடியாக்கி ஸ்பிரே போலவும் உபயோகிக்கின்றனர். இந்த ஸ்பிரே அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென்று இருக்கும். அதனால் பழத்தில் இயல்பாக இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்துவதால் மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் குறைந்து விடும். எனவே மிக கவனமாக பார்த்து மாம்பழங்களை வாங்க வேண்டும்.
இயற்கையான முறையில் மாம்பழத்தை பழுக்க வைக்க வைக்கோல், ஊதுபத்தி ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள் குறைந்த அளவுக்குத்தான் மாம்பழங்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, அட்டை பெட்டியில் போட்டு, ஊதுபத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்த பெட்டிக்குள்ளேயே இருக்கும் படி காற்றுப்புகாத வாறு மூடி விட வேண்டும். இரண்டே நாட்களில் மாம்பழக் காய்கள் பழுத்து விடும். பச்சையாக உள்ள காய்கள் இருந்தால் பழுக்க இரண்டு நாட்கள் தேவைப்படும். சற்று பழுத்திருந்தால் ஒரு நாளே போதுமானது.
– அ.ப.ஜெயபால்.