புவனேஸ்வர் : ஒடிசாவில் ஜஜ்பூர் ரோடு ரயில் நிலையத்தின் பணிமனை அருகே தொழிலாளர்கள் சிலர் ரயில்வே பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. இதனால், சில தொழிலாளர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் கீழ் மழைக்கு ஒதுங்கினார்கள். சிறிது நேரத்தில், இன்ஜின் இல்லாத சரக்கு ரயில் நகரத் தொடங்கியது. இதில் சிக்கி 6 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் ஒடிசாவில் ஜஜ்பூரில் சரக்கு ரயிலின் பெட்டி கவிழ்ந்து உயிரிழந்த ரயில்வே ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட அவர், காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே பலத்த காற்று வீசிய காரணத்தால் ரயில் பெட்டி கவிழ்ந்ததாகவும் இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.