கொழும்பு: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி போராடி வென்றது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 44.4 ஓவர்களில் 208 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ஜனித் லியனகே மட்டும் நிதானமாக ஆடி 127 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். அவர் 43-வது ஓவரில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த துஷ்மந்தா மற்றும் ஜெப்ரி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தாக்குப்பிடித்து ஆடினர். இறுதியில் 49 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து இலங்கை அணி போராடி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இறுதிவரை ஜிம்பாப்வே அணி வீரர்கள் போராடியதால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது.