புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேஜ கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. புதுச்சேரி தொகுதியை பாஜகவுக்கு முதல்வர் ரங்கசாமி விட்டுக் கொடுத்தது அவரது கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த காலங்களில் காங்கிரசை எதிர்த்து நாடாளுமன்ற தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், தோல்வியை தழுவினாலும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என மாஜிக்கள் சிலர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஏற்கனவே 3 நியமன எம்எல்ஏக்கள் பதவியை ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடு பாஜவினரே நிரப்பிக்கொண்டனர். அதுமட்டுமல்லாமல் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு வாரியத் தலைவர் பதவிகளை நிரப்ப விடாமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பாஜக கடும் நெருக்கடியை கொடுத்து வந்ததால் கட்சிக்காரர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர்.
தற்போது எம்பி சீட்டையும் பறித்துக்கொண்டதால் அவர்கள் செமகடுப்பில் உள்ளனர். அதிருப்தியில் உள்ள என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுக்கு தற்போது பாஜக நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்குவது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பாதிக்கும் என்றே கருதுகின்றனர். டெல்லி மேலிடம் கொடுத்த பிரஷ்ஷரால் தான் ரங்கசாமி வேறு வழியில்லாமல் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியை பாஜவுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஆர்வம் காட்டாமல் என்ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டனர். என்ஆர் காங்கிரசில் உள்ள அதிருப்தியின் தாக்கம் நாடாளுன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பட்சத்தில் அது பாஜவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்பதால் குய்யோ..முய்யோ.. எனக் கத்திக்கொண்டு அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் பாஜவும் ஈடுபட்டு வருகிறது. அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என கெஞ்சி கூத்தாடி வருகின்றனர். அதிருப்தியாளர்களை சரிகட்டும் நடவடிக்கையில் முதல்வர் ரங்கசாமியும் ஈடுபட்டுள்ளார்.
* தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி எம்பி விருப்ப மனு தாக்கல்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி எம்பி நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் விநியோகம் கடந்த 19ம் தேதி தொடங்கியது. ஏராமானோர் ஆர்வமுடன் போட்டி போட்டு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். அந்த மனுக்கள் கடந்த 1ம் தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. வரும் 7ம் தேதி மாலை 6 மணி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி நேற்று விருப்ப மனு தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், சண்முகையா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். முன்னதாக கனிமொழி எம்பி, மெரினா கடற்கரை சாலையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், நான் 5 ஆண்டுகளாக தூத்துக்குடியில் பணியாற்றி இருக்கிறேன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் பிரச்னைகள், அந்த மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டுள்ளேன் என்ற வகையில் மறுபடியும் அங்கு பணியாற்றும் வாய்ப்பு வேண்டும் என்று நினைக்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தேர்தல் நேரத்தில் நிறைய பணிகளை தொடங்குவார்கள். அதற்கு அப்புறம் அதை கட்டி முடித்தால் நன்றாக இருக்கும். தேர்தல் நேரத்தில் தோல்வி பயம் அதிகரிக்க அதிகரிக்க விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டு போவது இயற்கை தான். பாஜவுக்கு, தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரியும் போது விமர்சனங்களையாவது வைத்துவிட்டு போகலாம் என்று நினைக்கிறார்கள் என்றார்.
* பேரிடர் காலத்தில் வராமல் ஓட்டுக்காக அடிக்கடி வரும் மோடி: உதயகுமார் குட்டு
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் இயற்கை சீற்றம் காரணமாக சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டது. அசாதாரண நிலையில் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஒன்றிய அரசு கால தாமதப்படுத்துகிறது. தற்போது தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி அடிக்கடி ஓட்டுக்காக வருவது ஏற்புடையது அல்ல. இதுபோன்ற சூழ்நிலைகளில் தமிழ்நாடு மக்கள் நல்ல முடிவை பாராளுமன்ற தேர்தலில் வழங்குவார்கள்’’ என்றார்.
* பிரதமரால் இந்தியாவை நேசிக்க முடியவில்லை… ஆளுநரால் தமிழ்நாட்டை நேசிக்க முடியவில்லை… மோடி குடும்பம் என்றால் அதானி குழுமம்: செல்வப் பெருந்தகை ‘நறுக்’
கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் உள்ள முன்னாள் எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்தில் நேற்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மரியாதை செலுத்தினார். பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை, 100 ஆண்டுகள் கண்டிராத பேரிடர், அப்போதெல்லாம் மக்களை பார்க்கவில்லை, இப்போது வாக்கு சேகரிக்க தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கிறார். அவரது பேச்சு, வருவது எதற்காக என்று மக்கள் கவனிக்கின்றனர். ஒருபோதும் மோடியின் சித்து விளையாட்டுகள் தமிழ்நாட்டில் எடுபடாது. மோடி குடும்பம் என்றால் அதானி குழுமம், அதனை தவிர வேறொன்றும் தெரியாது. 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தாரா, இருக்கின்ற வேலை வாய்ப்பை பறித்ததுதான் மோடி குடும்பம். பெட்ரோல், டீசல் விலையை பாதியாக குறைத்தாரா, குறைக்காமல் ஏற்றியதுதான் மோடி குடும்பமா? சிறு குறு தொழில் இந்தியாவின் முதுகெலும்பு, பண மதிப்பிழப்பு மூலமாக அவற்றையெல்லாம் சிதைத்துள்ளாரே. அவரது நோக்கம் எல்லாம் இந்திய அரசியலமைப்பை அழித்துவிட்டு நாக்பூரை தலைமையகமாக வைத்து புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுத வேண்டும் என்பதுதான்.
எல்லா மாநிலங்களையும் அழித்தாகிவிட்டது, தமிழ்நாடுதான் சமூக நீதியில் மேலாலோங்கி நிற்கிறது, இதனை அழித்துவிட பொய் பித்தலாட்டத்துடன் வந்துவிடுவாரோ என்ற அச்சம் மக்கள் எல்லோருக்கும் உள்ளது. ஆளுநர் உண்மைக்கு புறம்பாக பேசும் ஆள், நேற்று ஜி.யு போப், கால்டுவெல் பற்றியெல்லாம் பேசியுள்ளார். அதற்கு ஆளுநருக்கோ, மோடிக்கோ அருகதை இல்லை. அவர்கள் தமிழ்நாட்டை சாராதவர்கள் தமிழை நேசித்தார்கள். இந்திய நாட்டை சாராதவர்கள் இந்தியாவை நேசித்தார்கள். மோடியால் இந்தியாவை நேசிக்க முடியவில்லை, ஆளுநரால் தமிழ்நாட்டை நேசிக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* அறிவித்த வேட்பாளர்கள் ஓடும் கட்சிதான் பாஜ
செல்வப்பெருந்தகை கூறுகையில், ‘இப்போது வட இந்தியாவிலும் அது பரவியுள்ளது. வட இந்தியாவில் பாஜ வேட்பாளர் முதல் பட்டியல் அறிவிக்கிறார். மேற்கு வங்கத்தில் இருந்து.பகவான்தாஸ் நான் நிற்க மாட்டேன் என்று ஓடிப்போகிறார், இந்த நாட்டின் மருத்துவ துறை அமைச்சராக உள்ள ஹர்ஷவர்த்தன் நான் பொதுவாழ்வில் இருந்து வெளியே செல்கிறேன் என்கிறார். இதுதான் பாஜவின் நிலைமை. எல்லோரும் பாஜவை விட்டு ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள். எங்களது கூட்டணி பலமாக உள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ்நாட்டின் மனசாட்சியாக, தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாக இருந்துகொண்டு இருக்கிற தமிழ்நாடு முதலமைச்சர், காங்கிரஸ் இயக்கத்தின் மனசாட்சியாகவும் இருந்து கொண்டு இருக்கின்றார். திமுகவை அழிப்பதாக கூறிக்கொண்டிருந்த தலைவர்கள் இன்று மண்ணில் இல்லாமல் போய்விட்டார்கள்’ என்றார்.