கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் 3 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் (22), விக்கி (23), அவினாஷ் குமார் (32) ஆகியோர் தனியார் தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 3 மர்ம நபர்கள் பைக்கில் வந்து வடமாநில வாலிபர்களை மடக்கி பணம் மற்றும் செல்போன் கொடுக்குமாறு கத்தியைக் காட்டி மிரட்டி உள்ளனர். ஆனால் அவர்கள் செல்போனை கொடுக்க மறுத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர்கள் வடமாநில வாலிபர்களின் தலை, கைகளை வெட்டிவிட்டு செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அபினேஷ் (22), மங்காவரம் சந்தோஷ் (24) மற்றும் மங்காவரத்தைச் சேர்ந்த (17) வயது சிறுவன் ஆகிய 3 பேரை நேற்று கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் கைது செய்தார். இதில் அபினேஷ் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் புழல் சிறையிலும், சிறுவன் செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.