சென்னை: வல்லூர் மற்றும் வடசென்னை அனல் மின்நிலையங்களில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று காலை முதல் மீண்டும் 710 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது என, உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் இயங்கும் வடசென்னை அனல் மின்நிலையத்தில்சில வாரங்களுக்கு முன் 3வது அலகில் ஆண்டு பராமரிப்பு பணி காரணமாக, அங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிந்து, நேற்று காலை அங்கு மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது. இதேபோல், வல்லூர் தேசிய அனல் மின்நிலையத்தில் முதலாவது அலகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பின்னர் அந்த அலகில் தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, நேற்று காலை முதல் மீண்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி துவங்கியது.