சியோல்: வட கொரியா மீண்டும் ஏவுகணைகள் சோதனை செய்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா அடிக்கடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று வட கொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை சோதனை செய்தது. 50 கி.மீட்டர் வேகத்தில் சென்று 300 முதல் 350 கி.மீட்டர் தூரம் வரையிலான இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்கொரியாவும் அமெரிக்கவும் அவ்வப்போது மேற்கொண்டுவரும் கூட்டு போர் பயிற்சிகள், வடகொரியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.கடைசியாக கடந்த மாதத்தில், வடகொரியா ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டது. தற்போது மீண்டும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளதால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனைக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.