சென்னை: வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கும், வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கும் மட்டுமே அனுமதி என மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 18ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல்-2024 தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனடிப்படையில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட வடசென்னை மக்களவைத் தொகுதி, தென்சென்னை மக்களவைத் தொகுதி மற்றும் மத்திய சென்னை மக்களவைத் தொகுதி ஆகிய மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19.04.2024 அன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், தெரிவித்ததாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்புமனுக்களானது நாளை (20.03.2024) முதல் 27.03.2024 வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) ஆகிய நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் கீழ்க்கண்ட அலுவலகங்களில் வேட்புமனுக்கள் பெறப்படும்.
1. வேட்புமனுத்தாக்கல் தொடக்கம்: 20.03.2024
2. வேட்புமனுத்தாக்கல் கடைசி நாள்: 27.03.2024
3. வேட்புமனு பரிசீலனை: 28.03.2024
4. வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்:30.03.2024
5. தேர்தல் நாள்: 19.04.2024
6. வாக்கு எண்ணிக்கை நாள்: 04.06.2024
மேலும், வேட்புமனுக்களானது மேற்கண்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மட்டுமே பெறப்படும். வேட்புமனுத்தாக்கல் செய்யும் நிகழ்வின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்கள் மட்டுமே வேட்புமனு செய்ய அனுமதிக்கப்படுவர். வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3.00 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை எனத் தெரிவித்தார்.