குன்னூர்: தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் 70 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக குன்னூர் சுற்றுவட்டாரத்தில் நஞ்சப்பச்சத்திரம், மாந்தாடா, சோக்ராக் எஸ்டேட் , கல்குழி உள்ளிட்ட எழுபது இடங்கள் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டன.
அந்த பகுதியில் இருப்பவர்கள் கனமழை காலங்களில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது. பேரிடர் காலத்தில் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்க வைக்க 49 பள்ளிகள், 53 சமுதாயக்கூடங்கள் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி குன்னூர் மற்றும்தான் சுற்றுவட்டார கிராமங்களில் பேரிடர் மேலாண்மை முதல் நிலை மீட்பாளர்கள் 700 பேர் தயார் நிலையில் உள்ளதாகவும். பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் உடனுக்குடன் தகவல் தெரிவிப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் உள்ள 231 ஆபத்தான மரங்கள் கண்டறியப்பட்டு 193 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. 21 இடங்களில் பேரிடர் முன்னெச்சரிக்கை தானியங்கி கருவிகளும் செயல்பாட்டில் உள்ளன.