கொடைக்கானல்: ஆங்கில புத்தாண்டை கொண்டாட சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கொடைக்கானலை நோக்கி படையெடுத்து வருவதால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. புத்தாண்டு கொண்டாட தென்மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருவது வழக்கம். புத்தாண்டு கொண்டாடுவதற்காக சுற்றுலாப்பயணிகள் வருகை கொடைக்கானலுக்கு தற்போது அதிகரித்துள்ளது.
வாரவிடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் மேலும் அதிகளவில் குவிய உள்ளனர். இதன் முன்னோட்டமாக நேற்றிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை சீராக அதிகரிக்க தொடங்கியுள்ளது. வந்து குவியும் வாகனங்களால் மலைச்சாலைகள் நெரிசலில் திணறுகின்றன. இதன் காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகள், சுற்றுலா இடங்கள் உள்ளிட்டவைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில் போலீசார் முன்னேற்பாட்டுகளை செய்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.