காத்மாண்டு: நேபாள அதிபர் ராமசந்திர பவுடல் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாள அதிபராக பதவி வகித்து வந்த பித்யா தேவி பண்டாரியின் பதவிக்காலம் மார்ச் 12ம் தேதியுடன் முடிவடைந்தது. புதிய அதிபருக்கான தேர்தல் மார்ச் 9ம் தேதி நடந்தது. இதில் நேபாள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ராமசந்திர பவுடல் 214 எம்.பிக்கள், 352 மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார். தொடர்ந்து 13ம் தேதி அவர் பதவியேற்றார்.
இந்நிலையில், வயிற்றுவலி காரணமாக காத்மண்டுவின் மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள திரிபுவன் போதனா பல்கலைக்கழக மருத்துவமனையில் அதிபர் ராமசந்திர பவுடல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வயிற்று வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமசந்திர பவுடலுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நலமாக உள்ளார். இன்னும் ஒருசில தினங்களில் அவர் வீடு திரும்புவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.