காத்மாண்டு: நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது. கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த ஜனதா சமாஜ்வாடி நேபாளம் (ஜேஎஸ்பி- என்) கட்சியின் தலைவர் உபேந்திரா யாதவ் துணை பிரதமராகவும் சுகாதார இலாகா அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வந்தார். இந்நிலையில், நேற்று அமைச்சரவையில் இருந்து அவர் ராஜினாமா செய்தார். கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் அவர் விலக்கி கொண்டார். ஜேஎஸ்பி-என் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 12 எம்பி.க்கள் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் அசோக் ராய் தலைமையில் 7 எம்பிக்கள் ஜேஎஸ்பி. என் கட்சியை விட்டு விலகினர். அதிருப்தி எம்பிக்கள் ஜனதா சமாஜ்வாடி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். அந்த கட்சிக்கு நேபாள தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உபேந்திரா வாபஸ் பெற்றுள்ளார். இருந்த போதிலும் நேபாள கம்யூனிஸ்ட்(யுஎம்எல்), மாவோயிஸ்ட் சென்டர், ஆர்எஸ்பி,ஜனதா சமாஜ்வாடி கட்சி, சிபிஎன்(யுஎஸ்) உள்ளிட்ட கட்சிகளின் 147 எம்பிக்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு உள்ளதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை.