நெல்லை : நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஆட்சியர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நெல்லை மாவட்டத்தில் வெள்ளச்சேதம் குறித்த கணக்கெடுப்பு கிராம வாரியாக தொடங்கப்பட்டது. வெள்ளச்சேதம் குறித்து துறைசார்ந்த அலுவலர்களால் நெல்லையில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. பொதுமக்கள் தங்களது வெள்ளச்சேத விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்கலாம்: ஆவணங்கள் இல்லாதவர்கள் புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் மூலம் வி.ஏ.ஒ, ஊராட்சி செயலாளரிடம் தெரிவிக்கலாம். வெள்ளச்சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியது. மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 ரேசன் கடைகளில் 63 ரேசன் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 90% பகுதியில் மின்விநியோகம் உள்ளது. பாதிக்கப்பட்ட 345 மின்கம்பங்களில் 135 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 1,836 மின்மாற்றிகளில் 1,770 மின்மாற்றிகள் சீர் செய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 துணை மின் நிலையங்கள் சீரமைக்கப்படுகின்றன”இவ்வாறு தெரிவித்தார்.