காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், பாதுகாப்பு குழுவினர் 513 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதன் மூலம் 3774.01 ஏக்கர் பட்டா நிலமும், 1972.12 ஏக்கர் அரசு நிலமும், 1005 வீடுகள், 13 ஏரிகள், குளங்கள், குட்டைகள், கால்வாய்கள், சுடுகாடு, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் நடத்தி வருகின்றனர். நேற்று 513 நாட்களாக நிலம் எடுப்பு அரசாணையை ரத்து செய்யக்கோரி பரந்தூர் வட்டார விவசாயிகள், வாழ்வாதார பாதுகாப்பு குழுவினர் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலான்கேட் பகுதியில் பெரும்திரள் போராட்டம் நடத்தினர். இதற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். இதில், ஏகனாபுரம், நெல்வாய், பரந்தூர், நாகப்பட்டு, தண்டலம், கூத்திரம் பாக்கம், தொடூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தினர். பின்னர் அவர்களாகவே கலைந்து சென்றனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.