Monday, May 20, 2024
Home » நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள், பாலங்கள் சீரமைக்க 3 நாட்களுக்குள் திட்டமதிப்பீடு: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள், பாலங்கள் சீரமைக்க 3 நாட்களுக்குள் திட்டமதிப்பீடு: அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

by Karthik Yash

சென்னை: வரலாறு காணாத மழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி ஆகிய பகுதிகளில் 8வது நாளாக நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே, குரும்பல் என்னும் இடத்தில் உள்ள பாலம், வெள்ளத்தால், உடைந்து விட்டது. இப்பாலத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: மழை வெள்ளத்தால் நாகர்கோவில்-5, விருதுநகர்-13, தென்காசி-13, தூத்துக்குடி-113 மற்றும் திருநெல்வேலியில்-44 சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்து தொடங்கப்பட்டு விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் திருச்செந்தூரையும், பாளையங்கோட்டையும் இணைக்கும் தரைப்பாலம் உடைந்ததால், தற்காலிகமாக 40 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் சாலை போட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள தரைப்பாலங்களை எல்லாம் உயர்மட்ட பாலங்களாக தரம் உயர்த்த வேண்டும் என்று முதல்வர் அறிவித்தார். அதன்படி, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள 1,127 தரைப்பாலங்கள் உயர்மட்டப் பாலங்களாக கட்டப்பட்டு வருகிறது. அதில் இந்த தரைப்பாலமும் அடங்கும். இதற்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் செக்டேம் கட்டுவதில் இருவேறு கருத்துகள் உள்ளது. ஆனால், தாமிரபரணி ஆற்றின் கரையை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. 4 மாவட்டங்களில் பழுதடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை நிரந்தரமாக சீரமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்து, மூன்று நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரிடம் கூறப்பட்டுள்ளது. மாஞ்சோலை மலை கிராமத்திற்கு, வனத்துறையிடம் ஒப்புதல் பெற்றவுடன் சாலை அமைக்கப்படும் என்றார்.

You may also like

Leave a Comment

3 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi