சென்னை: தமிழ்நாட்டில் ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று பரவி இருப்பது குறித்து இன்னும் சில நாட்களுக்குப் பிறகுதான் தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் தற்போது ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இவ்வகை வைரஸால் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தாலும் அது ஜேஎன்.1 வகை தானா என்பது ஒரு சில நாட்களுக்கு பிறகு தான் தெரியவரும். எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள்கூறியது: புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தாலும் அது பற்றி உலக அளவில் அச்சப்படும் வகையில் எந்த பாதிப்பும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜேஎன்.1 வகை கொரோனா தொற்று பரவி இருப்பது குறித்து இன்னும் சில நாட்களுக்குப் பிறகுதான் தெரியவரும். தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அச்சப்படும் வகையிலும், அதிர்ச்சி அளிக்கும் வகையிலும் எந்த பாதிப்பும் இல்லை . இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.