நெல்லை: நெல்லை முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோயில் குடமுழுக்கை அறநிலையத்துறையே நடத்தவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை முத்துமாலை அம்மன் கோயில் குடமுழுக்கை இந்து சமய அறநிலையத்துறை சார்பிலேயே நடத்த உத்தரவிடக் கோரி சென்னை சூளைமேட்டை சேர்ந்த பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நெல்லை முக்கூடல் ஸ்ரீ முத்துமாலை அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் மே 19-ம் தேதி குடமுழுக்கு செய்வதாக கூறி தனிநபர்கள் 4 பேர் பணம் வசூலித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே இது ஏற்கத்தக்கது அல்ல. தனிநபர் யாரையும் சாராமல் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலரே தலைமையேற்று கோவில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனுவின் விசாரணை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நெல்லை முத்துமாலை அம்மன் கோவில் குடமுழுக்கை அறநிலையத்துறையே நடத்தவேண்டும் என்றும், எந்த தனி நபரின் தலையீடும் இருக்கக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.