Wednesday, May 29, 2024
Home » புதுச்சேரியில் அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் கட்டிய வீடு இடித்து அகற்றம்..!!

புதுச்சேரியில் அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் கட்டிய வீடு இடித்து அகற்றம்..!!

by Kalaivani Saravanan

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சேதராபட்டு கிராமத்தில் அரசு நிலத்தில் பாஜக பிரமுகர் செல்வராஜ் கட்டிய வீடு இடித்து அகற்றப்பட்டது. புதுச்சேரி அடுத்த சேதராபட்டு கரசூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் பாஜக பிரமுகராக உள்ளார். 2006, 2007ம் ஆண்டு ரங்கசாமி முதலமைச்சராக இருந்தபோது, சேதராபட்டு கரசூர் கிராம பகுதியில் இருந்து 749 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் தரிசு நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேதராபட்டு கரசூர் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், அரசு சார்பு நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது.

தேவைகருதி குறிப்பிட்ட இடங்களை அரசு விவசாயிகளிடம் வலியுறுத்தி கையகப்படுத்தியது. கையகப்படுத்தப்பட்ட அனைத்து இடங்களுக்கும் அரசு நிர்ணயித்த விலை வாங்கப்பட்டது. இதில் கரசூரை சேர்ந்த பாஜக பிரமுகர் செல்வராஜ், அரசு கையகப்படுத்திய தனது நிலத்தை வாங்க மறுத்துவிட்டார். ஆனால் அவருக்கு சேரவேண்டிய நிலத்தின் தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. தனக்கு வீடு கட்டி குடியேற வேறு இடம் இல்லாததால் கடந்த ஆண்டு அங்கேயே வீடு கட்டினார். கட்டுமானப்பணி நடந்தபோது, வில்லியனூர் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு கட்டக்கூடாது என நோட்டீஸ் அனுப்பினர்.

தொடர்ந்து, தனக்கு இடம் இல்லாததால் இங்குதான் நான் வீடு கட்டி குடியேற வேண்டும் என்று விளக்கம் அளித்து செல்வராஜ் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் இன்று வில்லியனூர் உதவி ஆட்சியர் அப்பாராவு தலைமையில், தாசில்தார் சேகர், வில்லியனூர் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், அரசு சார்பு நிறுவன மேலாளர் ராகினி, போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்கள், நில அளவைத்துறை ஊழியர்கள், போலீசார் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் 4 ஜே.சி.பி. இயந்திரத்துடன் பாஜக பிரமுகர் செல்வராஜ் வீட்டுக்கு வந்து வீட்டில் உள்ளே இருக்கும் பொருட்களை எடுக்குமாறு கூறினர்.

அதற்கு செல்வராஜ், அவரது மனைவி சுதா மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து செல்வராஜ் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேரை குண்டுக்கட்டாக போலீசார் வாகனத்தில் ஏற்றி கோரிமேடு காவல்நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் வீட்டின் உள்ளே இருந்த அனைத்து பொருட்களும் வெளியில் எடுத்து வைத்துவிட்டு, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வீட்டின் முன்பக்கத்தில் இருந்து அனைத்து பகுதிகளும் இடித்து தரைமட்டமாக்கினர். பாஜக பிரமுகர் கட்டிய வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்த சம்பவம் கரசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi