தாம்பரம்: ‘நீட் விலக்கு, நம் இலக்கு’ என்ற தலைப்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கங்கள் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தாம்பரம் சண்முகம் சாலையில் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் பங்கேற்று ஏழை, எளிய அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கும், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவிற்கு இந்திய ஜனாதிபதி விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.
கையெழுத்திடப்பட்ட அனைத்து கடிதங்களும் திமுக தலைமைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் ரமணி ஆதிமூலம், ஜோதி குமார், சிட்லபாக்கம் சுரேஷ், பெரியநாயகம், திமுக நிர்வாகிகள் கருணாகரன், வேல்மணி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.