Tuesday, May 21, 2024
Home » கழுத்து பயிராக இருக்கும் கதிர்களை காப்பாற்ற குடமுருட்டி, காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்

கழுத்து பயிராக இருக்கும் கதிர்களை காப்பாற்ற குடமுருட்டி, காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும்

by Lakshmipathi

*விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூர் : திருவையாறு அருகே தண்ணீர் இல்லாமல் தொண்டை கதிராக நிற்கும் நெற்பயிர்களை காப்பாற்ற குடமுருட்டி, காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்:திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் குருவை சம்பா சாகுபடி செய்வது வழக்கம். திருவையாறு கீழ திருப்பந்துருத்தி, மேல திருப்பந்துருத்தி, காட்டுக்கோட்டை, பாதை வரையில் சுமார் 500 ஏக்கர் நிலபரப்பில் ஆற்று நீரை நம்பியும் போர்செட்டை நம்பியும் குருவை, சம்பா சாகுபடி செய்வார்கள்.

இந்த ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் போர்செட் வைத்து உள்ளவர்கள் மற்றும் அருகாமையில் உள்ளவர்கள் சம்பா சாகுபடி செய்தனர். மழை, போர்செட் மூலம் பெற்ற தண்ணீர் கொண்டு வங்கியில் கடன், வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து சாகுபடி செய்து உள்ளோம். ஆற்றில் தண்ணீர் வந்தால் ஏக்கருக்கு 30,000 வரை செலவு ஆகும். ஆற்றில் தண்ணீர் இல்லை என்றால் கூடுதலாக ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். அரசு ஆற்றில் தண்ணீர் வராது என்று அறிவித்த பின்பும் நாங்கள் சாகுபடி செய்து உள்ளோம். விவசாயத்தை தவிர மற்ற பணிகள் செய்ய தெரியாது. இதை வைத்து தான் எங்களது வாழ்வாதாரங்கள் உள்ளது.

இந்நிலையில் ஆறுகளில் தண்ணீரின்றி பயிர்களில் கருது வரும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர்வெல் வைத்துள்ளவர்களும் அவர்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால் எங்களுக்கு தர இயலாது என கைவிரிக்கின்றனர். நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டதால் போர்செட்டில் தண்ணீர் வருவதில் நூற்றுக்கு 25 சதவீதமே தண்ணீர் வரக்கூடிய சூழ்நிலையில் உள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவுபடி மேட்டூரில் திறக்கப்பட்ட 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் கல்லணை கால்வாய் வந்தடைந்து வெண்ணாற்றில் மட்டுமேடு சென்று கொண்டிருக்கிறது.
கீழ திருப்பந்துருத்தி, மேல திருப்பந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை ஆகிய பகுதியில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்ததனால் போர் செட்டில் தண்ணீர் வரவில்லை. எங்கள் குடமுறுட்டி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

அதனால் தொண்டை கருதாக இருக்கும் பயிர் வந்து நல்ல மகசூலை கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளது. செலவு செய்த தொகையிலேயே நஷ்டம் ஏற்பட்டாலும் அதிக நஷ்டம் ஏற்படாமல் இருக்க சூழ்நிலை உருவாகும். 15 நாட்களில் தண்ணீர் விடவில்லை எண்ணில் பயிர் தொண்டை கருதோடு கருகி அனைத்தும் குருக்காவாக மாறும் நிலையில் தள்ளப்படும்.

தற்பொழுது போர்வெலில் கூட தண்ணீர் வராதது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நாங்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கு குடமுருட்டிலும், காவிரியிலும் தண்ணீர் திறக்க அனுமதி வழங்கவில்லை. அதனால் நாங்கள் திறக்க இயலாது என கைவிரித்து விட்டனர். தமிழக அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு எங்கள் பகுதியில் அரசு அதிகாரிகளை பார்வையிட செய்து குடமுருட்டியிலும், காவிரியிலும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi