மும்பை: மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜ கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரசில் இருந்து அஜித் பவார் தலைமையில் பிரிந்து வந்த 9 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். நீண்ட இழுபறிக்கு பிறகு புதிதாக அமைச்சர்க ளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. துணை முதல்வர் அஜித் பவாருக்கு மீண்டும் நிதி மற்றும் திட்டத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் முந்தைய உத்தவ் தாக்கரே ஆட்சியிலும் நிதி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனஞ்சய் முண்டேவுக்கு விவசாய துறை, திலீப் வல்சே பாட்டீலுக்கு கூட்டுறவு துறை வழங்கப்பட்டுள்ளன. ஹசன் முஷ்ரிப் மருத்துவ கல்வித்துறை அமைச்சராகவும், சகன் புஜ்பால் உணவு மற்றும் பொது வினியோகத் துறை, தரம்ராவ் ஆத்ராம் உணவு மற்றும் மருந்து நிர்வாக துறை அமைச்சராகவும், சஞ்சய் பன்சோடே விளையாட்டு துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிதி தட்கரே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கும் அனில் பாட்டீல் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் பேரிடர் பராமரிப்பு துறைக்கும் அமைச்சர்களாகியுள்ளனர். நிதி மற்றும் திட்டத் துறைகளை அஜித் பவாருக்கும் வழங்குவதற்கு ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் கடுமையாக எதிர்த்ததாகவும், அதனை மீறி அவருக்கு இந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பட்நவிசிடம் உள்ள நிதித்துறை பொறுப்பு அஜித்பவாருக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர், உள்துறை, நீர்ப்பாசனம், எரிசக்தி, நாடாளுமன்ற விவகாரங்களை கவனிப்பார்.