மதுராந்தகம்: மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில், தேசிய மாணவர் படை தின பேரணி நடந்தது. இதனை, போக்குவரத்து ஆய்வாளர் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் இந்து மேல்நிலை பள்ளியில், தேசிய மாணவர் படை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை சவுமியா லட்சுமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் நம்பி பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.
தேசிய மாணவர் படை ஆசிரியர் வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு தேசிய மாணவர் படையில் சேர்வது குறித்தும், ராணுவத்தில் சேர்வது குறித்தும், ராணுவ வீரர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் கூறினர். இதனை தொடர்ந்து, தேசிய மாணவர் படை தின பேரணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பேரணியை போக்குவரத்து ஆய்வாளர் நாகராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் தேரடி தெரு, ஜிஎஸ்டி சாலை, ஹாஸ்பிடல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ராணுவத்தில் சேருவோம், உள்ளிட்ட தேசிய மாணவர் படை குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.