கூடுவாஞ்சேரி: உரிமம் பெறாமல் செயல்படும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளுக்கு சீல் வைக்கும்படி நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரகம் உத்தரவிட்டதன்பேரில், அதிகாரிகள் ஆய்வு செய்ததால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகராட்சியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் தொழில் உரிமம் பெற்று தொழில் செய்கிறார்களா? என்பது குறித்தும், தொழில் உரிமம் பெறாமலும், ஏற்கனவே தொழில் உரிமம் பெற்றும் புதுப்பிக்காமல் தொழில் செய்து வரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, உரிமம் பெறாத கடைகளுக்கு சீல் வைக்கும்படி நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் உள்ள அதிகாரிகளுக்கு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரகம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மண்டல இயக்குநர் ஆகியோர் நேற்று மாலை அதிரடியாக உத்தரவிட்டனர். அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் தாமோதரன், சுகாதார ஆய்வாளர் காளிதாஸ், வருவாய் ஆய்வாளர் துரைமுருகன் மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் நகராட்சியில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளை நேரில் ஆய்வு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.