கூடுவாஞ்சேரி: நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இங்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஐபிசி பெத்தேல் சபை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் பத்திரப்பதிவு ஆவண எழுத்தரும், சமூக ஆர்வலருமான ஜோஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அப்பகுதி வார்டு கவுன்சிலர் ஜெயந்தி ஜெமினிஜெகன், பாஸ்டர் அன்புராஜ் மோசஸ் ஆகியோர் கலந்து கொண்டு நகராட்சியில் உள்ள 105 ஆண், பெண் தூய்மை பணியாளர்களுக்கு கிறிஸ்துமஸ் கேக், புடவை, வேட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தனர்.