குனோ: குனோ பூங்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன் நமீபியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை இறந்த நிலையில் நேற்று தென்னாப்பிரிக்கா ஆண் சிறுத்தையும் மர்மமான முறையில் இறந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் நமீபியாவில் இருந்து எட்டு சிறுத்தையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிறுத்தையும் இந்தியா கொண்டு வரப்பட்டன. அவை மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் சில நாட்கள் பராமரிக்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டன. இவற்றில் சியாயா என்ற சிறுத்தை சமீபத்தில் நான்கு குட்டிகளை ஈன்றது. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளில் ‘சாஷா’ பெண் சிறுத்தை கடந்த மார்ச் 27ம் தேதி சிறுநீரக நோய்த் தொற்றால் இறந்தது.
இந்த நிலையில் குனோ தேசிய பூங்காவில் கண்காணிப்பில் இருந்த 6 வயதுடைய உதய் என்ற ஆண் சிறுத்தையை (தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது) கால்நடை மருத்துவ குழுவினர் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தனர். அந்த சிறுத்தை சற்று பலவீனமாக இருந்தது. அதையடுத்து நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றினர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த ஆண் சிறுத்தை இறந்தது. இந்த சிறுத்தை இறப்புக்கான காரணம் தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.