சென்னை: ‘இந்தியா’ என்ற பெயரே பாஜவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், மும்பை நகரில் நடந்த இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது: ‘இந்தியா’ என்ற பெயரே பாஜவுக்கு பயத்தையும் காய்ச்சலையும் உண்டாக்கி விட்டது. அதனால்தான், நம் கூட்டணியைக் கொச்சைப்படுத்தி பேசுவதையே பாஜவினர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். வெற்றிப் பாதையில் நாம் பயணித்து வருகிறோம் என்பதன் அடையாளம் இது.
பாஜ ஆட்சியை வீழ்த்தி மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் அரசை ஒன்றியத்தில் அமைப்பதே நமது அணியின் முழுமுதல் நோக்கமாகும். பாஜவை தனிமைப்படுத்தும் வகையில் பாஜவுக்கு எதிரான கட்சிகளை முடிந்த வரை இந்த அணியில் சேர்த்தாக வேண்டும். இதனை மனதில் வைத்து அனைத்துத் தலைவர்களும் செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நமது கூட்டணி, இந்தியா முழுமைக்குமான கூட்டணி என்பதால் இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவையும் குறைந்தபட்ச செயல் திட்டத்தையும் உடனடியாக உருவாக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் முகமாக அந்த அறிக்கை தான் அமையும். நமது நாட்டை பாஜ ஆட்சி பல்வேறு வகைகளில் சீரழித்துள்ளது.
அதனை எப்படிச் சரிசெய்யப் போகிறோம் என்பதை நாட்டு மக்களுக்குச் சொல்வதற்கான அறிக்கையாக அது அமைய வேண்டும். ஒரு கட்சி ஆட்சி முடிந்து இன்னொரு கட்சியின் ஆட்சி என்பதாக இல்லாமல், எதேச்சதிகார ஆட்சி முடிந்து, மக்களாட்சி மலர தேவையான கொள்கையின் மூலமாக மக்களிடையே நாம் நம்மை அடையாளப்படுத்த வேண்டும். நம்முடைய கூட்டணிக்கு இத்தகைய கொள்கைகள் தலைமை தாங்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது என்ற ஒற்றை இலக்கின் முன்பு, நிச்சயமாக பாஜ தோற்கடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இந்தக் கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கான ஒளிமயமான ஆண்டாக அமையவும் இப்போதே வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.