திருவள்ளூர்: திருவள்ளூரில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வழிபட்டு வந்த நாகாத்தம்மன் கோயில் இடிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எம்.ஜி.எம் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்த இடத்தில் சுயம்புவாக நாகாத்தம்மன் கோயில் உருவாகியது. இதையடுத்து அந்த ஊரை சேர்ந்த மக்கள் வழிபட்டு வந்தனர். கோயிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும ஊர் மக்களே படிப்படியாக செய்து வைத்திருந்தனர். மேலும் சிலர் நாகாத்தாம்மனை குல தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். ஆண்டுதோறும் விழா நடத்தி அனைத்து சடங்குகளையும் செய்து வழிபட்டு வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்ததால் கோயிலை சீரமைக்க ஏதுவாக சிறிய கட்டிடம் ஒன்றை கட்ட தொடங்கியுள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் தற்போதைய நிலத்தின் உரிமையாளர் அடியாட்களுடன் வந்து புதிதாக கட்டப்பட்டு வரும் கோயிலை இடித்து தள்ளியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் நேற்றிரவு கோயில் முன் திரண்டனர். சுமார் 50 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலை குலதெய்வமாக வழிபடுகிறோம். எனவே, கோயிலை இடித்து தள்ளிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் சுயம்புவாக தோன்றிய நாகாத்தம்மனை வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும்’ என்று மக்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.