சென்னை: மயிலாப்பூர் அருள்மிகு பயண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி மதிப்புடைய சொத்து மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி இன்று சென்னை, மயிலாப்பூர், நடுக்குப்பம், அருள்மிகு பயண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பீட்டிலான இடம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. சென்னை, மயிலாப்பூர், நடுக்குப்பம், அருள்மிகு பயண்டியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமாக 8,000 சதுரடி பரப்பிலான இடம் சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதனை டாக்டர் ஜுபாய் என்பருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.
இவர் வாடகை செலுத்தாமலும், உள்வாடகைக்கு விடப்பட்டதாலும், சென்னை இணை ஆணையர் மண்டலம் – 2 அவர்களிடம் சட்டப்பிரிவு 78ன்படி முறையீடு செய்து அதன் அடிப்படையில் பெறப்பட்ட உத்தரவின்படி, சென்னை மாவட்ட உதவி ஆணையர் பாஸ்கரன் அவர்கள் முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.15 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி பா.தமிழ்செல்வி, ஆய்வாளர் திரு.மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.