சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உட்பட நாளை 7 கோயில்களில் மகாசிவராத்திரி பெருவிழா நடக்கிறது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை அறிவிப்பின்படி, 2022ம் ஆண்டு முதன்முதலில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சார்பில் மகாசிவராத்திரி பெருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 2023ல் கூடுதலாக, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், தஞ்சாவூர் பிரகதீசுவரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில், பேரூர் பட்டீசுவரர் கோயில் ஆகியவை சேர்க்கப்பட்டு, 5 கோயில்கள் சார்பில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. 2023-2024க்கான சட்டமன்ற அறிவிப்பில், மகாசிவராத்திரி விழா கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மற்றும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் ஆகிய 2 கோயில்களையும் சேர்த்து 7 கோயில்கள் சார்பில் நாளை மகாசிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளது. மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயில் விழாவை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார்.