மூணாறு : மூணாறு அருகே வனப் பகுதியில் குட்டி யானை துதிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித் திரிகிறது. அந்த யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.கேரளா மாநிலம், மூணாறு அருகே சின்னக்கானல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆனையிறங்கல் வனப் பகுதியில் கடந்த சில நாள்களாக இரண்டு குட்டி யானைகள் உட்பட ஆறு யானைகள் சுற்றித் திரிகின்றன. இந்த கூட்டத்தில் உள்ள சுமார் ஒரு வயதுடைய குட்டி யானைக்கு துதிக்கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். வேலியை கடக்க முயன்றபோது கம்பி கிழித்து குட்டி யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போது காட்டு யானை கூட்டத்துடன் குட்டி யானை சுற்றி திரிவதால் மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பது கடினம் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், காயமடைந்த குட்டி யானையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.