நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஜெயக்குமார் கடந்த 4ஆம் தேதி தனது வீட்டின் அருகே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமாரின் குடும்பத்தினர், காங்கிரஸ் நிர்வாகிகளிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஜெயக்குமார் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
ஜெயக்குமார் இல்லம் அமைந்திருக்கும் கரைசுத்துப்புதூர் பகுதியில் 10 கி.மீ. தூரத்திற்கு சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்படுகிறது. ஜெயக்குமார் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆவதற்கு முன் வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புகார் அளிக்கப்பட்ட தேதி மற்றும் ஜெயக்குமார் காணாமல் போன தேதிக்கு இடையே கரைசுத்துப்புதூர் வந்து சென்ற வாகனங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது.
உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதிவான மொபைல் எண்கள் குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, ஜெயக்குமார் மரண வழக்கு விசாரணையில் புதிய தகவல்கள் கிடைக்கப்பற்றுள்ளது. அதன்படி, ஜெயக்குமார் கூலிப்படையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை அல்லது மும்பையைச் சேர்ந்த கூலிப்படைக்கு தொடர்பா? என தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.